Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணி: எந்தக் கட்சியையும் அதிமுக அழைக்கவில்லை-வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுப்போம் என்று தேர்தல் கமிஷனர் கூறியிருக்கிறார். ஆனால் திமுகவினர் இப்போதே பண வினியோகத்தை ஆரம்பித்துவிட்டனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுகவின் 19வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களான காவிரி, முல்லைப் பெரியாறு, பாம்பாறு, பாலாறு பிரச்சினைகளில் தமிழக உரிமைகளைக் காக்கும் கடமையில் திமுக அரசு முழுமையாக தவறிவிட்டதால், விவசாயிகள் சொல்லொணா இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 5 ஆண்டுகளாக அரசின் நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்டுள்ள மின்வெட்டினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, சிறு தொழில்கள் நசிந்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களும், தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை சிதைந்துவிட்டது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பொதுத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்திடவும், மதிமுக அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், அர்ப்பணிப்பு உணர்வோடு முனைப்புடன் செயலாற்றிட இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் வைகோ பேசுகையில், மக்களுக்கான தனது செயல்பாடுகளால், இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய பெருமை மிகுந்த தலைவராக அண்ணா திகழ்ந்தார். ஆனால், அண்ணா உருவாக்கிய கட்சியையும், தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் தன் குடும்பத்தின் நலனுக்காக முதல்வர் கருணாநிதி பயன்படுத்திக் கொண்டார்.

480க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது 106 மீனவர்களை கைது செய்துள்ளது. ஆளுங்கட்சியினரை போராட்டம் நடத்தும்படி முதல்வர் கூறியிருக்கிறார்.

மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்கிறது. இதற்கு முன்பு நமது கடல் எல்லையில் கண்ணி வெடிகளை இலங்கை கடற்படை வைக்க இந்திய அரசு எப்படி அனுமதித்தது?. அதனை கருணாநிதி கண்டித்தாரா?. இந்த போராட்டத்தை வைத்து மீனவர்களையோ, மக்களையோ ஏமாற்ற முடியாது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்ட ஆ.ராசாவை நியாயப்படுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அவரை சிபிஐ கைது செய்தால் கோபத்தை யார் மீது காட்ட வேண்டும். மத்திய அரசு மீதல்லவா காட்ட வேண்டும். பெரம்பலூரில் உள்ள கடைகளை அடைப்பதும், வாகனங்களை நொறுக்குவதும் என்ன நியாயம்?.

யாருக்கு எந்த இலாகா ஒதுக்குவது என்பது என்னிடம் இல்லை. கூட்டணி கட்சி தான் முடிவு செய்கிறது என்று பிரதமரே கூறியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அப்படியானால் அவர் என்ன ஆட்டி வைக்கப்படக்கூடியவரா?.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் உண்மை பயனாளிகள் யார் என்பது வெளிவர வேண்டும். சுப்ரீம் கோர்ட் கண்டிப்பால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ விசாரணையை துரிதப்படுத்தி இருப்பதாக செய்திகள் வருகின்றன. சிபிஐ நடுநிலையோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சுப்ரீம் கோர்ட் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து இவ்வழக்கை கண்காணிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம்- ஒழுங்கு பெருமளவு சீர்கேடு அடைந்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 7,000க்கும் மேற்பட்ட படுகொலைகள் மாநிலத்தில் நடந்துள்ளன. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

தேர்தல் கமிஷனர் தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுப்போம் என்று கூறியிருக்கிறார். ஊழலில் சம்பாதித்த பணத்தில், ரூ. 1,000 முதல் 5,000 ரூபாய் வரை, வாக்காளர்களுக்கு கொடுத்து ஓட்டுகள் பெற திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இப்போதே பண வினியோகத்தை ஆரம்பித்துவிட்டனர்.

திமுகவுடன் தொடர்புடைய 2ஜி அலைக்கற்றை ஊழல் உலக அளவில் பேசப்படும் மாபெரும் ஊழலாக உள்ளது. இந்த ஊழலின் பாதிப்பு பற்றி கிராமப்புற மக்கள் கூட பேசுகிறார்கள். ஆனால், இலவசங்களாலும், பணம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றியும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக கருதுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவினர் 1,200 கோடி ரூபாயை செலவழித்தனர். ஆனால், அதிமுக கூட்டணியை விட, 14 லட்சம் ஓட்டுகளைத்தான் அவர்களால் கூடுதலாகப் பெற முடிந்தது.

எனினும், திமுக ஆட்சியின் மீது மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளனர். எனவே எவ்வளவு பணம் கொடுத்தாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள். நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்பதே எனது கணிப்பு.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக- மதிமுக இடையேயான முதல்கட்டப் பேச்சு முடிந்துள்ளது. எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பதை இப்போது கூற முடியாது. நான் போட்டியிடுவது குறித்து கட்சியின் ஆட்சிமன்றக்குழு முடிவு செய்யும். விரைவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்றார் வைகோ.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேட்டதற்கு, அதை அதிமுக தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அதிமுக அணியில் சேருமாறு எந்தக் கட்சியையும் நாங்கள் அழைக்கவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+