சேலம்-திருப்பூரில் 2 விபத்துகளில் 4 பெண்கள் உள்பட 8 பேர் பலி
சேலம் & திருப்பூர்: சேலம் மற்றும் திருப்பூர் அருகே இன்று அதிகாலை நடந்து இரு சாலை விபத்துகளில் 4 பெண்கள் உள்பட 8 பேர் பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் மணிகண்டன் (23), ரங்கசாமி (28), கந்தசாமி (45), பூமிநாதன் (30). இவர்கள் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினமும் கிரிவலத்துக்கு சென்றனர். கிரிவலத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை பஸ்சில் சேலம் திரும்பினர்.
ஆட்டையாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய இவர்கள் சந்தியூர் நோக்கி நடந்து சென்றனர். சேலம்-திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது ஒரு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் இவர்கள் மீது மோதிய வாகனம் எது என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தையும், அதன் டிரைவரையும் தேடிவருகிறார்கள்.
வேன்-லாரி மோதலில் 4 பெண்கள் பலி:
திருப்பூர் அருகே நடந்த மற்றொரு விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டையச் சேர்ந்த 8 ஆண்கள், 10 பெண்கள், 9 குழந்தைகள் ஆகியோர் மகிந்திரா வேன் மூலம் கோவையை அடுத்த ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். வேனை ராஜா என்பவர் ஓட்டிச் சென்றார்.
இன்று காலை 4.30 மணி அளவில் உடுமலைபேட்டை பொள்ளாச்சி சாலையில் உள்ள சுடுகாடு அருகே இவர்கள் சென்ற வேனும், எதிரே வந்த லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் வேனில் நொறுங்கி சித்ரா (28), சாந்தி (35), கலைச்செல்வி (29), வெள்ளையம்மாள் (35) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பெண்கள், டிரைவர் உள்ளிட்ட 4 ஆண்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேன் டிரைவர் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாடு இழந்ததின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications