20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட்ட வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக சிபிஐயால் தேடப்பட்டு வந்த இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த ராஜஸ்ரீ (45) 1991ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்தபோது போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
போலி ரேஷன் கார்ட் மூலம் லிங்கம்மா நாராயணசாமி என்ற பெயரில் இவர் போலி பாஸ்போர்ட் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் ஜாமீனில் இருந்த இவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து இவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிஐ அறிவித்தது.
ஆனால் அதற்குள் நாட்டை விட்டு வெளியேறிவிட்ட ராஜஸ்ரீ கனடாவில் குடியேறிவிட்டார். இதையடுத்து இவருக்கு எதிராக இன்டர்போல் மூலம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பிடிபடவில்லை.
இந் நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு ராஜஸ்ரீ கனடா நாட்டிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்த கனடா பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அடுத்த இரு வாரங்களில் இவர் நாட்டை விட்டு வெளியேறினார். ராஜிவ் கொலையாளி்களுக்கு இவரது மாமனார் சில உதவிகளை செய்ததாகவும் புகார் உள்ளது.












Click it and Unblock the Notifications