முல்லைப்பெரியாறு: கேரள குற்றச்சாட்டை நிராகரித்த ஐவர் குழு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் நியமனம் ஒருதலைப்பட்சமானது என்ற கேரள அரசின் குற்றச்சாட்டை ஐவர் குழு நிராகரித்து விட்டது.
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதால் அதன் உயரத்தை 136 அடியில் இருந்து 146 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இதை கேரளா ஏற்க மறுக்கிறது.
இந்த பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவின் ஆய்வுக்கு உதவியாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள கேரள பிரதிநிதிகள் குறித்து அந்த மாநில அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந் நிலையில் டெல்லியில் நடந்த ஐவர் கூட்டத்தில் கேரளாவின் அதிருப்தி குறித்து விவாதிக்கப்பட்டது.
கேரள பிரதிநிதியின் நியமனம் தவறானது என்று அந்த மாநில அரசு கருதினால், அவரை மாற்றக் கோரலாம். அதை விட்டுவிட்டு ஐவர் குழு குறித்தே கேரள அரசு தவறான கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. கேரள அரசோ, தமிழக அரசோ தங்கள் கருத்துகளை கடிதம் மூலம் தெரிவிக்காமல் திறமையான வழக்கறிஞர்கள் மூலம் எடுத்துரைக்கலாம் என்று ஐவர் குழு கூறியுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை அளிப்பதற்கு தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனையும், ஆய்வறிக்கையும் தேவைப்படுகிறது என்பதாலேயே ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஐவர் குழு விளக்கமளித்துள்ளது.
இக் கூட்டத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராகி, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
வெளிநாட்டில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்டு வந்து, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்யலாம் என்று 2 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் என்றும் அதை, மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications