நாவரசு கொலை வழக்கு-ஜான் டேவிட் விடுதலையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு ராகிங் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜான் டேவிட்டை விடுதலை செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் இயங்கும் முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நாவரசு. இவர் அப்போதைய சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர்.
விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான் டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஜான் டேவிட் வாக்குமூலமும் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர்.
இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டேவிட் தரப்பு அப்பீல் செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனஞ்செயன், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜான் டேவிட், தனது முதல் வாக்குமூலத்தில் நாவரசை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். பின்னர் நடந்த ரத்த பரிசோதனையின் போதும் ஜான் டேவிட் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அத்துடன் இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டது.
இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications