ராஜபக்சேவை தொலைபேசியில் பிரதமர் எச்சரிக்க வேண்டும்-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து கடுமையான எதிர்ப்புகள் வெளியுறவுத் துறைச் செயலாளர் நிரூபமா ராவ் மூலம் ராஜபக்ஷே அரசுக்கு இந்திய அரசு தெரிவித்து ஒரு வாரம் கூட முடிவடையாத சூழ்நிலையில், இலங்கை கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்ததாக ஒரு குற்றச்சாட்டினை சுமத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து கைது செய்துள்ளனர்.
16ம் தேதி அன்று மீண்டும் இந்திய மீன்பிடி படகுகளை தாக்கி, அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி 24 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது.
வெறும் கடிதங்களை சென்னையிலிருந்து டெல்லிக்கு அனுப்புவதன் மூலமோ, அல்லது டெல்லியிலிருந்து கொழும்புவுக்கு தூதுவர்களை அனுப்புவதன் மூலமோ எந்தப் பயனும் ஏற்படாது.
கருணாநிதியால் அனுப்பப்படும் கடிதங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுகொள்வதில்லை என்பது வரிசையாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தெளிவாகிறது.
இதே போன்று, இந்தியாவின் எச்சரிக்கையையும் இலங்கை அரசு அலட்சியம் செய்து வருகிறது. இதில் கடுமையான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பதினாறாவது ஆண்டு விழாவிற்கு இந்திய விமானப்படையின் சுகோய் விமானம் அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியாவின் கடல் எல்லையை தனது முந்தைய நிலைக்கு எடுத்துவரும் வகையில், இந்திய வரைபடத்தில் கச்சத் தீவினை மீண்டும் சேர்க்க, இலங்கை அரசுடனான கச்சத் தீவு உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இந்தியாவின் கடற்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
இந்திய மீனவர்களுக்கு எதிரான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால், கடுமையான விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் அந் நாட்டு அதிபர் மஹிந்தா ராஜபக்ஷேவிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசும் காரணம்-திருமா:
இந் நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், 1983ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இதற்கு சிங்கள அரசு மட்டுமே பொறுப்பு அல்ல. மத்திய அரசும் காரணமாகும். 112 மீனவர்களை கைது செய்த மறுநாளே மேலும் 37 மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 700 பேர் மாயமாகி உள்ளனர். எனவே திமுக எம்.பி.க்கள் வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் உறுதுணையாக இருக்கும்.
திமுக கூட்டணியில் பாமக சேர்ந்துள்ளதை வரவேற்கிறேன். விடுதலை சிறுத்தைகளும், பாமகவும் இடம் பெற்றுள்ள இக்கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications