கலைஞர் டிவியில் சிபிஐ ரெய்ட்-திமுக உறவு பாதிக்காது: காங்
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்கும் சி்பிஐ, கவிஞர் கனிமொழி எம்பிக்கு சம்மன் அனுப்பப்போவதாக ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், கனிமொழி எம்பி பேட்டி தனது தொலைக்காட்சிப் பேட்டியொன்றில், இந்த சம்மன் விவகாரத்தை மறுத்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் சி்பிஐ, உங்களை விசாரிக்க சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, 'அதுபோல சம்மன் எதுவும் எனக்கு வரவில்லை' என்றார் கனிமொழி.
கலைஞர் டிவி அலுவலகத்தில் நடைபெற்ற சி்பிஐ சோதனை குறித்து அவரிடம் கேட்டபோது, "எனக்கு அதுபற்றி தெரியாது. நான் கலைஞர் டி.வி. அலுவலகத்திற்கு செல்லவில்லை'' என்றார்.
இந்த விஷயத்தில் கலைஞர் டிவியின் நிலை என்ன? என்று கனிமொழி எம்பியிடம் கேட்கப்பட்டபோது, "கலைஞர் டிவியின் நிலை தெளிவாக இருக்கிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமாரும் தெளிவாக கூறிவிட்டார். இதில், மறைப்பதற்கு எதுவும் இல்லை'' என்றார்.
இந் நிலையில், சிபிஐயின் நடவடிக்கையால் திமுக-காங்கிரஸ் உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், சிபிஐ விசாரணையும் கூட்டணியும் வெவ்வேறு விஷயங்கள். வழக்கு விசாரணை தொடர்பான நடவடிக்கைகளைத்தான் சிபிஐ எடுத்து வருகிறது. இதில் அரசியல் ஏதுமில்லை. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி எந்த வகையிலும் பாதிக்காது என்றார்.