சென்னை பறக்கும் ரயில் நிலையத்தில் என்ஜினீயரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு
சென்னை: திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் என்ஜினீயரை கத்தியால் குத்திய வாலிபர் அவரிடமிருந்து பர்ஸ், செல்போன், மோதிரத்தைப் பறித்துச் சென்றார்.
சென்னை தரமணி டைடல்பார்க்கில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் என்ஜினியர் அருள் (25). அவினாசியை சேர்ந்த இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார்.
பறக்கும் ரயில் மூலம் தரமணிக்கு பணிக்கு சென்று வருவார். நேற்று மாலை 5.30 மணியளவில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு அருள் வந்தபோது கூட்டம் அதிகமில்லை. அப்போது அவரிடம் வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி பர்சை கொடுக்குமாறு மிரட்டினார்.
அருள் பர்சை கொடுக்க மறுத்தவுடன், அவரை அந்த நபர் கத்தியால் குத்தினார். இதையடுத்து அவரிடமிருந்து செல்போன், மோதிரம் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.
காயமடைந்த அருள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறக்கும் ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பே இல்லாத நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.