சொத்து குவிப்பு வழக்கு-ஜெவிடம் விளக்கம் பெற நீதிமன்றம் முடிவு

குற்றவியல் தண்டனைச் சட்டம் 313 (1) (b) பிரிவின் கீழ் குற்றவாளிகளின் கருத்துகளைக் கேட்டறிய நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் தொடர்பாக ஜெயலலிதா தரப்பு மீண்டும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கு கடந்த 14ம் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன் விசாரணைக்கு வந்தபோது, சாட்சியங்களின் வாக்குமூலங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததில் இருந்த தவறுகளைச் சரி செய்து, திருத்தங்களைப் சேர்க்கையாக அளித்துள்ளதால் கோர்வையாகப் படிக்க முடியவில்லை என்றும், சரியான மொழிபெயர்ப்பை சம்பந்தப்பட்ட பகுதிகளில் சேர்த்த பிறகு அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.
17 சாட்சிகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்றும் மீதமுள்ள சாட்சிகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்கு மேலும் 4 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பு கோரியது.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி மல்லிகார்ஜுனையா, விசாரணைக்கு தேவைப்படும்போது திருத்தப்பட்ட மொழிபெயர்ப்புகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இணைக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் தவறான மொழிபெயர்ப்புகளைத் திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மொழிபெயர்ப்பில் தவறு என்ற காரணத்துக்காக விசாரணை நடவடிக்கையைத் தள்ளிப்போட வேண்டிய அவசிமில்லை என்றார்.
மேலும் குற்றவியல் தண்டனைச் சட்டம் 313 (1) (b) பிரிவின் கீழ் குற்றவாளிகளின் கருத்துகளைக் கேட்டறியவும் முடிவு செய்துள்ளதாகக் கூறி வழக்கு விசாரணையை மார்ச் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர சசிலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா உள்ளிட்ட இந்த 4 பேரிடமும் இந்த வழக்குத் தொடர்பான பொதுவான கேள்விகளை எழுப்பி பதில் பெற நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிபதி உத்தரவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications