அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் போதாது: 9 தொகுதிகள் வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி போர்க்கொடி

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதே போல இன்னொரு தலித் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சிக்கும் 1 தொகுதியை ஒதுக்கினார்.
மேலும் டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கினார். கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும் சரத்குமாரின் கட்சிக்கும் அதிமுக கூட்டணியில் இடம் ஒதுக்கப்படவுள்ளது.
இந் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் ஜனநாயகம் தழைத்தோங்க, மக்கள் ஆட்சி மலர, அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்பதற்கு முயற்சி எடுத்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பிரத்யேக சின்னம் பெற்று போட்டியிட முடிவு செய்துள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1.5 கோடி ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை முழுமையாக அதிமுக அணிக்கு திரட்டவும், சட்டமன்றத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களை கணிசமான அளவு பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யவும் புதிய தமிழகம் கட்சி கூடுதல் தொகுதியில் போட்டியிடுவது அவசியம் ஆகிறது.
எனவே, தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் கிடைக் கும் வகையில், புதிய தமிழகம் கட்சிக்கு குறைந்தது 9 தொகுதிகளை வழங்க பரிசீலனை செய்யும்படி அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதன்முதலில் தொகுதி ஒதுக்கப்பட்ட கட்சி திடீரென கூடுதல் இடம் கேட்டுள்ளது ஜெயலலிதாவை கடுப்பாக்கியுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications