பார்வதியம்மாள் மறைவு: சீமான், திருமாவளவன் இரங்கல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழீழத்தின் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று இறந்து விட்டார் என்னும் துயரச்செய்தி வந்துள்ளது. அவர் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவு கூறப்படும். நாங்கள் வரலாற்றில் படித்த கரிகாலனை நேரில் காட்டியவர் பார்வதி அம்மாள்.
அவருக்கு நாம் அனைவரும் நேரில் சென்று வணங்கி அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு ஈழம் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
விரைவில் இந்த இழி நிலை மாறும். பார்வதி அம்மாளுக்கு நாம் தமிழர் கட்சி தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இறுதிக் காலத்தில் தனது உடல் நலனுக்குச் சிகிச்சை பெறும் பொருட்டு தாய்த் தமிழ்நாடு வந்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மனித நேயமற்றுத் திருப்பி அனுப்பினார்கள். எந்த ஆட்சி அதிகாரம் அவருக்கு அனுமதி மறுத்ததோ அந்த ஆட்சி அதிகாரமே தலைகுனியும் வண்ணம் இன்று நம் நாட்டின் சாலைகளெங்கும், தெருக்கள் எங்கும், சந்து பொந்துகள் எங்கும் பார்வதி அம்மாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற வேண்டும்.
அவரின் நினைவைப் போற்றும் வகையில் நெடுமாறன் நடத்தும் அமைதிப் பேரணியில் நாம் தமிழர் சார்பில் அதில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன். இன்று மாலை கோவையில் பார்வதி அம்மாளின் நினைவைப் போற்றும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது", என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
பார்வதியம்மாவின் மறைவையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் துயர்பகிர்வு அறிக்கை:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் திருமிகு பார்வதி அம்மாள், வல்வெட்டித்துறை பொது மருத்துவமனையில் நீண்டகாலமாக உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (20-02-2011) அதிகாலையில் காலமாகிவிட்டார்.
அவருடைய இறப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உலகத் தமிழர்களை தலைநிமிர வைத்த தமிழீழத் தேசியப் புரட்சியாளர் மேதகு பிரபாகரன் அவர்களை ஈன்ற மகத்தான பெருமைக்குரிய அன்னை பார்வதி அம்மாளின் இறப்பு உலகத் தமிழர்களுக்கு தாங்கவொண்ணாத் துக்கத்தை அளிப்பதாகும். பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து உற்ற துணைவரை இழந்து தாளமுடியாத துக்கத்தில் விழுந்து தனிமையில் வாடிய தாய் பார்வதி அம்மாள் பத்துகோடித் தமிழர்களுக்கும் தாய் என்னும் பெருமையைப் பெற்றிருந்தாலும் அவர்களின் கடைசிப் பொழுதுகளில் உடனிருக்க ஒருவருமே இல்லை எனும் அவலத்திற்கு ஆளான நிலையை எண்ணி விம்முவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை.
அவரது இழப்பு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே பேரிழப்பாகும். அவரது இழப்பால் உள்ளம் வருந்தும் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி ஆறுதல் தேடும் நிலையே உள்ளது.
அந்த வகையில் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications