நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுகவால் தான் தோற்றோம்-ராமதாஸ்

அவர் அளித்துள்ள பேட்டியில், 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டு தோல்வி அடைந்ததும் எங்கள் கட்சி அத்துடன் முடிந்து விட்டதாக கூறினார்கள். எங்களை பொறுத்தவரை அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாமகவின் வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்தன. அதனால் அதிமுக வெற்றி பெற்றது.
ஆனால் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுக ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் நாங்கள் தோல்வியடைய நேரிட்டது.
அதன் பிறகு பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்களின் பலத்தை நிரூபித்து காட்டினோம். அந்த தேர்தலில் பாமக அதிக வாக்குகளை பெற்று 2வது இடத்தைப் பிடித்தது, அதிமுக தோல்வியடைந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வன்னிய சமுதாய மக்களை ஒன்று திரட்டியுள்ளேன். இதனால் வன்னிய மக்களிடையே பாமகவுக்கு ஆதரவாக ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்களால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியும். எங்களது சக்தியையும் செல்வாக்கையும் திமுக அணிக்கு ஆதரவாக திருப்ப முடிவு செய்திருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அனைவரும் திமுக கூட்டணியில் பாமக சேர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரவிக்குமாரும் என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பாமகவுடன் இணைந்து தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்ற தங்களின் 20 ஆண்டு கால கனவு இப்போது நனவாகி விட்டதாக தெரிவித்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications