அன்புமணியின் முன்னாள் சிறப்பு அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்ட்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை சோதனை நடந்தது. சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவினர் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.
முன்னாள் இன்டலிஜென்ஸ் பீரோ (ஐ.பி) அதிகாரியான மூர்த்தி, அன்புமணி நலத்துறை அமைச்சரானபோது, அவரது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அன்புமணிக்கு நெருக்கமான இவர் தனது பதவிக் காலம் முடிந்ததையடுத்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இந் நிலையில் இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் முறைகேடாக அங்கீகாரம் தந்ததாக கடந்த 6 மாதங்களுக்கு முன் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சென்னை சேத்துப்பட்டு டாக்டர் குருசாமி சாலை அடுக்கு மாடி குடியிருப்பில் 3வது மாடியில் உள்ள மூர்த்தியின் வீட்டை சோதனையிட சிபிஐ காத்திருந்தது.
ஆனால், மூர்த்தி கடந்த 6 மாதமாகவே அமெரிக்காவில் வசித்து வந்ததால் சோதனைகள் தள்ளிப் போயின. அதே நேரத்தில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டை சிபிஐ பூட்டி சீல் வைத்தது.
நேற்று நள்ளிரவில் மூர்த்தி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவதை அறிந்த சிபிஐ அதிகாரிகள், அதிகாலையிலேயே டெல்லியிலிருந்து சென்னை வந்து விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அவர் வந்திறங்கிவுடன் அவரை சுற்றி வளைத்த 5 சிபிஐ அதிகாரிகள் அவரை அழைத்துக் கொண்டு அதிகாலையிலே வீட்டுக்குச் சென்று அவர் முன்னிலையில் வீட்டைத் திறந்து சோதனையை ஆரம்பித்தனர். பிற்பகல் 3 வரை நடந்த இந்தச் சோதனைகளில் அவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அவர் விரைவில் கைதாகலாம் என்றும் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் அன்புமணியிடமும் சிபிஐ விசாரணை நடத்துமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications