கசாப்பைத் தூக்கிலிட குறைந்தது 10 வருஷமாகலாம்!

கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நேற்று பாம்பே உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது. ஆனால் இத்தோடு முடிந்து விடவில்லை கசாப்பின் கதை.
அடுத்து கசாப், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடியும். ஒரு வேளை அதில் தீர்ப்பு பாதகமாக வந்தால், மறு சீராய்வு மனுவை அவன் தாக்கல் செய்யலாம். அதிலும் அவனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம்.
குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் கருணை மனு மீது அவர் நடவடிக்கை கால அவகாசம் எதுவும் கிடையாது. அவர் பார்த்து எப்போது முடிவெடுக்கிறாரோ அப்போதுதான் அதற்கு விடிவு பிறக்கும்.
ஏற்கனவே நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவும் இதே போலத்தான் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைத்து விட்டு சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார். அந்த மனு மீதே இன்னும் நடவடிக்கை முடியவில்லை. எனவே கசாப் விவகாரத்தில் அவன் தூக்கிலிடப்படுவது அவ்வளவு சீக்கிரம் நடந்து விடாது என்றே கருதப்படுகிறது.
அதேசமயம், கருணை மனு என்பது அனைத்துத் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கும் உரிமையாக கருத முடியாது என்று முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், அது உரிமையல்ல. கசாப் விஷயத்தில் அவனது தண்டனையை நிறைவேற்ற வழக்கை துரிதப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
கடந்த 30 ஆண்டுகளில் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்கள் மொத்தம் 77. இதில் 10 பேருடைய மரண தண்டனை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது குடியரசுத் தலைவரிடம் அப்சல் குரு உள்பட மொத்தம் 27 பேரின் கருணை மனுக்கள் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. கசாப் ஒரு வேளை கருணை மனு தாக்கல் செய்தால், 28வது நபராகத்தான் அவர் வரிசையில் நிற்பார்.
உத்தேசமாக பார்க்கும்போது கசாப்பைத் தூக்கிலிட குறைந்தது இன்னும் 10 வருடமாவது ஆகும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications