நியூசிலாந்தில் 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது-65 பேர் பலி
ஆறு மாதங்களுக்கு முன்புதான் தெற்கு நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா நகரான கிறிஸ்ட்சர்ச்சில் 7.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. இந்த நிலையில் இன்று காலை கிறிஸ்ட்சர்ச் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.
இந்த பூகம்பத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 65 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இடிந்துள்ளன.
ஆங்கிலிகன் கதீட்ரல் என்ற நகரின் பழமையான சர்ச் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. சாலைகள் பிளவுபட்டுள்ளன. பூகம்பம் தாக்கிய பகுதிகளில் உள்ள கட்டடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டு விட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி மதியம் 12.51 மணிக்கு இந்த பூகம்பம் தாக்கியது. இது ஏற்பட்ட 10 நிமிடங்கள் கழித்து 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications