பார்வதி அம்மாள் மறைவு-பெங்களூர் தமிழ்ச் சங்கம், பொதுவுடமைக் கட்சி அஞ்சலி
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மறைவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளன.
பெங்களூர் தமிழ்ச் சங்கம் பார்வதி அம்மாளுக்கு புகழாரம் சூட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
உலகத்தமிழர் பார்வையில் மாவீரனாக விளங்கிய பிரபாகரனை ஈன்றெடுத்த அவருடைய தாயார் பார்வதி அம்மாள், நேற்று முன்தினம் மறைந்த செய்தி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகிற்கு மனிதன் ஒருவனை அளித்த அன்னை பார்வதி அம்மாள் மறைவு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். தனது இறுதி காலத்தில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சையை பெற அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்திருப்பார் என்று கருதத் தோன்றுகிறது.
பார்வதி அம்மையாரின் மறைவு தமிழர்களின் நெஞ்சில் நீங்கா வடுவினை ஏற்படுத்தினாலும், தமிழர்கள் வரலாற்றில் ஒரு நிலையான இடத்தை அவரது வரலாறும் இடம்பெறும். பார்வதி அம்மையாரின் மறைவிற்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி இரங்கல்
தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி சார்பில், 20ம் தேதியன்று சிதம்பரம் காந்திசிலை அருகில் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி வீரவணக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு அமைப்பின் நகரச் செயலர் கு.சிவபிரகாசம் தலைமை தாங்கினார். இதேபோல மதுரையில், வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜான்சிராணி பூங்காவில் தொடங்கிய அமைதிப் பேரணி கறுப்புக் கொடியுடன் முழக்கங்கள் எதுவும் இன்றி,நேதாஜி சாலை,மேலமாசி வீதி வழியாக வடக்குமாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பை அடைந்து, பின்னர் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது பேசிய அனைவரும், தமிழகத்தில் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்கப்படாததை கடுமையாக கண்டித்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications