Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கு-கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

Parvathi Ammal
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இது இந்தியாவுக்கு அவமானம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று நடக்க இருந்தது.

பொதுமக்களின் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். பார்வதி அம்மாளின் மறைவையொட்டி அப் பகுதியில் தமிழர்கள் கறுப்புக் கொடிகளை வீடுகளில் பறக்க விட்டிருந்தனர்.

உதை இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவினர் பிடுங்கி வீசினர்.

இந் நிலையில் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க திருமாவளவன் இன்று காலை விமானம் மூலம் கொழும்பு சென்றார். அவரை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தமிழ் தேச கூட்டமைப்பினர் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர்.

இந் நிலையில் திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்த போலீசார், அவர் இலங்கைக்குள் நுழைய தடை விதித்திருப்பதாகக் கூறி, அடுத்த விமானத்திலேயே சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

இலங்கையின் இந்தச் செயலை வன்மையாக கண்டித்துள்ள திருமாவளவன், இது இந்தியாவுக்கே அவமானம். இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்றார்.

இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும்:

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 20-02-2011 அன்று அதிகாலையில் வல்வெட்டித் துறை பொது மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது. அந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கட்சிப் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், இளஞ்சேகுவேரா ஆகியோருடன் கொழும்பு சென்றோம்.

கொழும்பு விமான நிலையத்தில் சிங்கள அரசின் குடிவரவுத் துறை அதிகாரிகள் எங்களை வழிமடக்கி, 'இலங்கைக்குள் நுழைய உங்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்!' என்று கூறினர். 'நாங்கள் பிரபாகரன் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே வந்திருக்கிறோம். வேறெதுவும் உள்நோக்கம் இல்லை. ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும்' என்று வாதாடினோம். அவ்வாறு அனுமதிக்க இயலாது. நீங்கள் வந்த அதே விமானத்தில் திரும்பிச் செல்லுங்கள்' என்று வற்புறுத்தினர்.

'நான் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றக் குழுவிலும் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும், இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைவிட இந்திய அரசுக்கும், இந்திய தேசத்திற்கும் இழைக்கும் பெரும் அவமதிப்பே ஆகும். இதை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உரிமைப் பிரச்னையாக எழுப்புவேன்' என்றும் எச்சரிக்கை விடுத்தேன்.

மேலும் என்னையும் என்னுடன் வந்தவர்களையும் எதற்காகத் திருப்பி அனுப்புகிறீர்கள் என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். அவ்வாறு வழங்க இயலாது என்று மறுத்ததோடு எங்களை வலுக்கட்டாயப்படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

பிரபாகரனுக்கு மட்டுமின்றி இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அனுமதிக்காத ராஜபட்சேவையும் சிங்கள இனவெறி அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பார்வதி அம்மாள் இறப்பையொட்டி ஈழத்தில் கருப்புக்கொடிகள் ஏற்றக்கூடாது எனவும் அவரின் உருப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனவும் ராஜபட்சேவின் ராணுவ அரசு கெடுபிடி செய்து வருகிறது.

பார்வதி அம்மாளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தத் துடிக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அஞ்சுகிற வகையில் ராஜபட்சேவின் ராணுவம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ராஜபட்சேவின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கு எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது. ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் சவால் விடுகிற வகையில் ராஜபட்சேவின் அணுகுமுறைகள் தொடர்கின்றன. லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த ராஜபட்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியதில் அறியலாம்.

இந்நிலையில் இந்திய, தமிழக அரசுகள் ராஜபட்சே கும்பலைக் கடுமையாக எச்சரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

மேலும் தமிழகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது. நேரிலே அஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும் அன்னை பார்வதி அம்மாளுக்கு லட்சோபலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது வணக்கத்தை தமிழகத்திலிருந்து செலுத்துகிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

நாம் தமிழர் அமைதிப் பேரணி:

இந் நிலையில் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று மாலை நாம் தமிழர் சார்பாக சென்னையில் அமைதி பேரணி நடை பெற்றது. இது நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+