லாக்கரை திறக்கமுடியாததால் எல்ஐசி பணப்பெட்டிக்கு தீ வைப்பு : காசோலைகள் கருகின
புளியங்குடி: கொள்ளையடிக்கப்பட்ட புளியங்குடி எல்ஐசி பணப்பெட்டி கருகிய நிலையில் குப்பை தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புளியங்குடியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ரூ.5.76 லட்சம் மற்றும் ரூ.1.85 லட்சம் காசோலைகள் அடங்கிய இரும்பு பணப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து எஸ்பி விஜேயந்திர பிதாரி, புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் டிஎன் புதுக்குடி பகுதியில் உள்ள நகராட்சி குப்பை தொட்டியில் கொள்ளையடிக்கப்பட்ட பணப்பெட்டி கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து புளியங்குடி போலீசார் அங்கு சென்று பணப்பெட்டியை கைப்பற்றினர். தீ வைத்து எரிக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் அது காணப்பட்டது. உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் பணப்பெட்டியை குப்பை மேட்டில் வீசி சென்றது தெரிய வந்தது. இது குறித்து எல்ஐசி மேலாளர் சுந்தர்ராஜனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் இன்று அதிகாலை புளியங்குடி வந்தார். பின்னர் டிஎஸ்பி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியை போலீசார் சுந்தர்ராஜனிடம் இருந்து சாவியை வாங்கி திறந்து பார்த்தனர்.
அப்போது பெட்டிக்கு தீவைக்கப்பட்டதால் அதிலிருந்த பணம் மற்றும் காசோலைகள் எரிந்து சாம்பலாகி இருப்பது தெரிய வந்தது. பணப்பெட்டியை கொள்ளையடித்து தீ வைத்தவர்கள் உள்ளுர்காரர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications