கன்னடியன் கால்வாய் பிரச்சனை-விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம்
நெல்லை: தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கன்னடியன் கால்வாயின் தடுப்பு சுவரை அகற்றியே தீர வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயிகளும், வியாபாரிகளும் போராட்டம் நடத்தினர்.
ஆங்கிலேயர்கள் காலத்தில், பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் இணையும் பகுதியில், தாமிரபரணியின் குறுக்கே கன்னடியன் கால்வாய்க்கு நீர் செல்வதற்காக ஒரு மீட்டர் உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டியுள்ளனர்.
இந்த தடுப்பு சுவரைத்தான், நதி நீர் இணைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, மேலும் ஒன்றரை மீட்டருக்கு உயர்த்தி, அதாவது இரண்டரை மீட்டர் உயர்த்தி கட்டியுள்ளார்கள். இதற்கு நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியினர், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அணையில் கட்டப்பட்ட தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி நகர பகுதிகளிலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து தாமிரபரணி பாசன அமைப்பு திட்டக் குழு தலைவர் உதயசூரியன் கூறுகையில்,
கன்னடியன் கால்வாயில் தடுப்பு சுவரை அகற்ற உறுதி அளித்த அதிகாரிகள் தற்போது கோர்ட்டில் வழக்கு உள்ளதாக கூறி 3 மாத காலம் அவசாகம் கேட்கின்றனர். இதனால் திட்டமிட்டு முற்றுகை போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
விவசாயிகள் கன்னடியன் கால்வாய்க்கு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் டிஐஜி சண்முகராஜேஸ்வரன் சம்பந்தப்பட்ட கால்வாய்க்கு போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் 2 டிஎஸ்பிகள் தலைமையில் நேற்று முதல் கால்வாய்க்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாளை சீனிவாச நகரிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை, ஏரலில் கடைகள் அடைப்பு
இன்று பாளையங்கோட்டை சீனிவாச நகரில் நெல்லை, தூததுக்குடி மாவட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள், வணிகர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, வல்லநாடு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தெய்வசெயல்புரம், வாகைகுளம் பகுதியில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தில் புதுக்கோட்டை, வல்லநாடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான வணிகர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். வியாபார ஸ்தலங்களில் முக்கிய ஊரான ஏரலில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் பந்த் போன்று கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோல் சாயர்புரம், சிவத்தையாபுரம், நடுவைக்குறிச்சி, கூட்டாம்புளி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடியில் 10 ஆயிரம் கடைகள் அடைப்பு
இன்று தூத்துக்குடியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டன. முத்தையாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், முக்கனி, ஆழ்வார்திருநகரி, செய்துங்கலநல்லூர் மற்றும் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பாளையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தாமிரபரணி பாசன பகுதிக்கு உட்பட்ட தென்பகுதி விவசாயிகள். வணிகர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் வாரசந்தை நடைபெறும். நேற்று மாலை விவசாயிகளுக்கு ஆதரவாக செய்துங்க நல்லூர் வியாபார சங்கத்தினர் இன்று கடை அடைப்பு அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் மார்க்கெட்டுக்கு வந்த மீன் மற்றும் காய்கறிகள் கடை வியாபாரிகளை பொதுமக்கள் மொய்த்தனர்.












Click it and Unblock the Notifications