ஒரிஸ்ஸா-நக்ஸல்களால் கடத்தப்பட்ட கலெக்டர், பொறியாளர் விடுதலை
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸாவில் நக்ஸலைட்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், அரசுப் பொறியாளர் ஆகியோர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
ஒரிஸ்ஸாமாநிலம் மல்காங்கிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.கிருஷ்ணா, அரசுப் பொறியாளர் பவித்ர மஜி ஆகியோர் கடந்த வாரம் நக்ஸல்களால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டுமானால் சிறையிலிருக்கும் நக்ஸல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நக்ஸல்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து நக்ஸல்கள் சார்பில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆர்.எஸ்.ராவ், ஹர்கோபால், தண்டபாணி மொஹந்தி ஆகியோர் அரசுடன் பேச்சு நடத்தினர். சிறையில் இருக்கும் நக்ஸல் தலைவர் காந்தி பிரசாதும் இந்தக் குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
நக்ஸல்கள் விடுவிக்கக் கோரிய அவர்களது முக்கியத் தலைவர் ஸ்ரீனிவாசலு உள்ளிட்ட 12 பேரும் செவ்வாய்க்கிழமை மல்காங்கிரி விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அதற்கு அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
பேச்சுக்களில் பங்கேற்ற காந்தி பிரசாத் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் நக்ஸல்களின் கோரிக்கை. அதன்படி, அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலாவரம் அணைக்கட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும், மல்காங்கிரி, கோராபுத் பகுதிகளில் அபகரிக்கப்பட்ட நிலங்களுக்கு பழங்குடி மக்களிடம் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் மாநில உள்துறை செயலாளர் பெஹரா கூறினார்.
மேலும் கோராபுத் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இருவரது குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்பட்டன.
மேலும் மாலி, தேவ்மாலி மலைப் பகுதிகளில் பாக்சைட் தோண்டியெடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர்கள் சிலா டி, பத்மா ஆகியோரை விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு உத்தரவாதம் தந்தது.
இதையடுத்து கடத்திச் செல்லப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணா, இளநிலைப் பொறியாளர் பவித்ர மஜி ஆகியோரை மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications