கடலூரில் படகு விபத்து-25 மாணவ, மாணவியர் பத்திரமாக மீட்பு
கடலூர்: கடலூரில் அதிக பாரத்துடன் சென்ற படகு மூழ்கியதில் அதில் பயணம் செய்த 25 மாணவ, மாணவியர் உப்பனாற்றில் மூழ்கினர். அவர்களைப் பொதுமக்களும், போலீஸாரும் போராடி பத்திரமாக மீட்டுள்ளனர்.
10 கிராமங்களுக்கு பஸ்கள் வராதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு உள்ளிட்ட 10 கிராமஙங்களுக்கு கடந்த ஒரு வாரமாக பஸ்கள் ஓடவில்லை. கடந்த வாரம் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டு பஸ்களைத் தாக்கியதால் பஸ் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது போக்குவரத்துக் கழகம்.
இதனால் மாணவ, மாணவியர் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். கிடைக்கிற வாகனத்தில் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை, நொச்சிக்காட்டிலிருந்து செம்மங்குப்பத்திற்கு ஒரு படகில் 25 மாணவ, மாணவியர் ஏறி பயணம் செய்தனர்.
அதிக பாரத்துடன் படகு சென்றதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் தண்ணீரில் சிக்கிய மாணவ, மாணவிகள் கதறினர். இதையடுத்து விரைந்து வந்த பொதுமக்களும், போலீஸாரும் கடுமையாகப் போராடி அத்தனை பேரையும் பத்திரமாக மீட்டு விட்டனர்.
உடனடியாக பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications