சிஎன்என்-ஐபிஎன் டிவியின் வைர மாநில விருதை தட்டிச் சென்றது தமிழகம்
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு வைர மாநில விருதுகள் வழங்கி வருகிறது.
2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில், தமிழ்நாடு-இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.
சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் 23.2.2011 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற சிறப்புமிகு விழாவில், இந்த விருதுகளை குடியரசுத் துணைத்தலைவர் அமீத் அன்சாரி அவர்கள், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் வழங்கியதுடன், முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்குத் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறும் கூறினார்.
சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் வழங்கிய இந்த விருதுகளை -முதல்வர் கருணாநிதியிடம் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காண்பித்தார்.
இந்நிகழ்வின்போது, நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவு அமைச்சர் எ.வ.வேலு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications