போலி செக் மூலம் ரூ.9.5 கோடி மோசடி முயற்சி: ரியல் எஸ்டேட் அதிபரிடம் விசாரணை
கோவில்பட்டி: கோவில்பட்டி வங்கியில் ரூ.9.5 கோடி போலி செக் கொடுத்து மாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் கதிரவன். ரியல் எஸ்டேட் அதிபர். கோவில்பட்டி அருகே ராமனூத்து கிராமத்தில் 50 ஏக்கர் நிலத்தை விற்பதற்காக மும்பையைச் சேர்ந்த தேவ்கிநந்தன் ஜெகுப்தா என்பவரின் பவர் ஏஜென்டாக செயல்படும் சேகர் என்பவர் கடந்த 19-ம் தேதி கதிரவனிடம் ரூ.9.5 கோடிக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மாற்றத்தக்க வகையில் செக்கை கொடுத்தார்.
அதை மாற்றுவதற்காக கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு கதிரவன் சென்றார். அவர் கொடுத்த செக் மீது வங்கி மேலாளர் சேசமாரி குமாரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள தேவ்கிநந்தன் ஜெகுப்தாவிடம் தொடர்பு கொண்டபோது தான் செக் கொடுக்க வில்லை என தெரிவித்தார். இதையடுத்து போலி செக் கொடுத்த கதிரவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேசமாரி குமாரன் கோவில்பட்டி கிழககு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications