பட்ஜெட் 2011: நிதிப் பற்றாக்குறை 4.6 சதவீதமாகக் குறைகிறது!
டெல்லி: 3 ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் எதிர்ப்பார்த்ததை விட அதிக வருவாய் கிடைத்துள்ளதால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டு 5.1 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.6 சதவீதமாகவும் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 3 ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் மட்டும் 1.08 லட்சம் கோடி வருவயாகக் கிடைத்தது அரசுக்கு. இதனால் இந்த நிதியாண்டு மத்திய அரசுக்கு இருந்த நிதிப்பற்றாக்குறை 5.5 லிருந்து 5.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பட்ஜெட்டை சமர்ப்பித்த பிரணாப் முகர்ஜி, இதுகுறித்து கூறுகையில், "நிதித்துறை பற்றாக்குறைதான் பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 3 ஜி ஏலம் மூலம் வந்த வருவாய், இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க எனக்கு பெரிதும் உதவியது.
வரும் நிதியாண்டில் (2011-2012) இந்த பற்றாக்குறையை இன்னும் கூட கணிசமாகக் குறைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. 4.6 சதவீதமாக இந்த பற்றாக்குறை அமையும்...", என்றார்.
இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை கடந்த 2009-2010-ல் உச்சகட்டத்தை எட்டியது. இந்த ஆண்டில் மட்டும் மொத்த வருவாய்க்கும் செலவுக்கு இடையே 6.3 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ 40000 கோடி வரை விற்றது நினைவிருக்கலாம்.
இனி வரும் ஆண்டில் இந்த நிர்ப்பந்தம் இருக்காது என்றும் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.