27ம் தேதி திருச்சியில் மாநில மாநாடு-தயாராகிறது திமுக
திருச்சி: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், திருச்சியில் வருகிற 27ம் தேதி பிரமாண்ட மாநில மாநாட்டை கூட்டியுள்ளது திமுக. அக்கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை கட்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி, திருவானைக்காவல் அருகே 60 ஏக்கர் நிலப்பரப்பு மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது. இங்குதான் திமுகவின் 10வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் 3 நாள் மாநாடாக இது திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நெருங்கி விட்டதால், ஒரு நாள் மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி 10 மணிக்கு முடிவடையும். இறுதி நிகழ்ச்சியாக முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றுவார்.
மிகப் பெரிய மாநாடாக இதை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக திருச்சி மாவட்ட திமுகவினர் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.