காங்கிரசுக்கு 66 தொகுதிகள் தர திமுக சம்மதம்?

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் விவகாரத்தில் மட்டும் இழுபறி நிலவுகிறது. அதிகபட்சம் 53 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று திமுக கூறி வந்தது. ஆனால், 80 தொகுதிகளுக்கும் மேல் எதிர்பார்த்தது காங்கிரஸ். மேலும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் விடாமல் பிடித்துக் கொண்டுள்ளது. இதனால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் குழு 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இன்றும் சோனியாவுடன் ஐவர் குழு சந்திப்பு:
இதுதொடர்பாக சோனியா காந்தியுடனும் ஐவர் குழுவினர் ஒருமுறை ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸ் குழுவினர் விளக்கினர்.
அப்போது ஐவர் குழுவைச் சேர்ந்த தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோல் கலந்து கொண்டனர். அதேபோல சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தக் குழுவினர் திமுக கூறியதை சோனியாவிடம் விளக்கியதாகத் தெரிகிறது. அடுத்து சோனியா கூறியதை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் தெரிவித்து பேச்சுவார்த்தையை தொடரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் எந்த சிக்கலும், இழுபறியும் இல்லை. திமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை விவரங்களை சோனியா காந்தியிடம் தெரிவித்தோம்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்துவதா அல்லது டெல்லியிலா என்பதை சோனியா முடிவு செய்வார். அதேபோல பேச்சுவார்த்தையை அடுத்து எப்படித் தொடருவது என்பதையும் சோனியாவே முடிவு செய்வார் என்றார்.
66 தொகுதிகளுக்கு உடன்பாடு?:
இந் நிலையில் காங்கிரஸுக்கு 66 தொகுதிகள் தர திமுக முன் வந்துள்ளதாகவும், இதை அந்தக் கட்சி ஏற்றுக் கொண்டதாகவும் டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் விட்டுத் தர முன் வந்ததால் இடங்களின் எண்ணி்க்கையை திமுக உயர்த்தியதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications