கேரளா: தமிழக சிறுமி நாய் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்ததில் பலி-4 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு வேலை செய்து வந்த தமிழக சிறுமியை நாய் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்துள்ளனர். சித்ரவதை தாங்கமுடியாத சிறுமி இறுதியில் பரிதாபமாக இறந்தாள்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அசோகபுரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ஜோஸ் குரியன். இவரது மனைவி சிந்து. இவர்கள் வீட்டில் கடலூர் அன்பு மணி நகரைச் சேர்ந்த செல்லையா-அஞ்சலை தம்பதியினரின் மகள் தனலெட்சுமி வீட்டு வேலை செய்து வந்தாள். இந்த சிறுமி கடந்த 24-ம் தேதி உடல் முழுவதும் வெட்டு காயம் மற்றும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகி்ச்சை பலனின்றி இறந்தாள். இதையடுத்து ஜோஸ் குரியன், சிந்து, சிறுமியின் மாமா நாகப்பன், சிறுமியை ரூ. 15 ஆயிரத்துக்கு வாங்கி கொடுத்த ஷைலா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
வக்கீல் தம்பதி பல நாட்களாக சிறுமியை நிர்வாணமாக இருக்க வைத்துள்ளனர். நாய் கூண்டில் அடைத்தும் துன்புறுத்தியுள்ளனர். ஜோஸ் குரியன் தனலெட்சுமியின் உடலில் சூடு போட்டுள்ளார். சில சமயங்களில் ஷூவால் வயிற்றில் உதைத்துள்ளார்.
தனலெட்சுமியின் அக்கா ராஜேஸ்வரியும் திருச்சூரில் உள்ள ஷைலாவின தங்கை ஷெரின் வீ்ட்டில் வேலை செய்ய நாகப்பன் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார் என்றனர். கைதான ஜோஸ் குரியன், மனைவி சிந்து ஆகியோரை நேற்று முன்தினம் மாலை போலீசார் அவர்களின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் வீட்டுக்கு முன் திரண்டனர். போலீசுடன் வந்த குரியன் தம்பதியை தாக்கினர். இதையடுத்து போலீசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.