ஐநா மனித உரிமை கவுன்சிலிலிருந்து லிபியா சஸ்பென்ட்!
இந்த நடவடிக்கைக்காக ஐநாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது அமெரிக்கா.
லிபியாவில் கலவரக்காரர்களுக்கும் அதிபரின் படைகளுக்குமிடையே பெரும் மோதல் நடந்து வருகிறது. கலவரத்தை அடக்க விமானங்கள் மற்றும் பீரங்கிப் படையைப் பயன்படுத்தி வருகிறார் கடாபி.
இதனால் லிபியாவை மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து சஸ்பென்ட் செய்வதாக அறிவித்துள்ளது ஐநா சபை.
இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்கா, 'தனது மக்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டும் அரசுகளுக்கு மனித உரிமைகள் கவுன்சிலில் இடமில்லை' என்பதை ஐநா சபை தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
ஐநா மனித உரிமை கவுன்சிலில் உள்ள எந்த நாடும் அதன் உறுப்பினர் பதவியை இழந்ததில்லை. முதல்முறையாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிபியாவின் இதுபோன்ற வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தகவலை சர்வதேச சமூகம் ஒருமித்த குரலில் பேச வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.
குற்றங்களுக்கு கடாஃபி அரசை பொறுப்பாக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து செயல்படும். தேவைப்படுவோருக்கு மனிதாபிமான உதவியும் வழங்கும். ஜனநாயக மாற்றத்தை செயல்படுத்த லிபிய மக்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்,