பாகிஸ்தான் அமைச்சர் கொலைக்கு ஒபாமா, ஹில்லாரி கண்டனம்
வாஷிங்டன்: பாகிஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சபாஷ் பட்டி கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஒபாமா கூறியதாவது,
இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சபாஷ் பட்டி கொல்ல்பட்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இந்த குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நீதிக்கு முன் கொண்டு வர வேண்டும்.
இறந்த அமைச்சரின் குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு நான் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்கர்கள் மற்றும் உலக மக்களுக்கு மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் உரிமை, விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாடின்றி இருக்கும் உரிமை உள்ளது என்றார்.