காமன்வெல்த் ஊழல்... பிரசார் பார்தி சிஇஓ வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!
டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக மத்திய அரசின் பிரசார் பார்தி நிறுவன சிஇஓ பிஎஸ் லல்லியின் வீட்டில் சிபிஐ இன்று அதிரடி சோதனை மேற்கொண்டது.
டெல்லியில் சில வாரங்களுக்கு முன் நடந்த காமன்வெல்த் போட்டியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விழாக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த சுரேஷ் கல்மாடி இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழல் உள்ளது.
இந்த ஊழலில் அரசின் அதிகாரிகள் பலருக்கும் பெரிய அளவில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பிரசார் பாரதி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பி எஸ் லல்லியும் ஒருவர். இந்தப் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை ரூ 246 கோடிக்கு பிரிட்டிஷ் நிறுவனத்துக்கு கொடுத்த விவகாரத்தில் ரூ 135 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது அரசுக்கு.
இதுதொடர்பாக இவர் மீது சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அவரது டெல்லி வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காலை ஆரம்பித்த சோதனை பிற்பகல் வரை தொடர்ந்தது. 1971-ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி லல்லி. இந்த ஊழல் காரணமாக அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்தியாவைச் சேர்ந்த ஜூம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் வாஸிம் அகமத் டெல்வியின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. லல்லி ஒப்பந்தம் செய்த பிரிட்டிஷ் நிறுவனத்திடமிருந்து ஒளிபரப்பு உரிமையை சப் காண்ட்ராக்ட் பெற்ற நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications