சட்டசபைத் தேர்தல்-பாஜகவில் சுறு சுறு விருப்ப மனு விநியோகம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர் இன்று முதல் கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகளில் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்ய பெரும் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் கூட்டணியில் சேருமாறு யாரும் அழைப்பு விடுக்காததால் தனித்துப் போட்டியிடவுள்ள பாஜகவிலும் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.
பெரும் கூட்டம் கூடவில்லை என்றாலும் கூட சுறுசுறுப்பான அளவில் கூட்டம் காணப்பட்டது. பலரும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்து விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.
234 தொகுதியிலும் போட்டி!:
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தேர்தல் கமிஷன் ஏப்ரல் 13ல் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. எல்லோருடைய கருத்துக்களை கருத்தில் கொண்டதாக கமிஷன் அறிவித்தாலும் கூட, தமிழர்களின் இந்த கருத்துக்களை ஏன் கருத்தில் கொள்ளவில்லை?
மார்ச், ஏப்ரலில் பள்ளி இறுதி தேர்வுகள் நடக்கும். சித்திரை திருவிழா ஏப்ரலில் துவங்குகிறது. ஏப்ரல் 14ல் தமிழ் புத்தாண்டு நாள். இவற்றை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளாதது ஏன்? தேதியை, மே முதல் வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளர்கள் தனித்து நிறுத்தப்படுவர். இது குறித்து சென்னையில் தேர்தல் குழு கூடி விருப்ப மனுக்களை பெற்று, வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும். அப்பட்டியல், டில்லியில் 10ம் தேதி கூடும் மேலிட குழுவிடம் வழங்கப்பட்டு, இறுதி செய்யப்படும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications