சட்டசபை தேர்தலில் பாஜக-சுப்பிரமணிய சாமி கூட்டணி
கோவை: வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவும் சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இத் தகவலை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் மாநில துணைத் தலைவருமான எச்.ராஜா தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் விருப்ப மனு தாக்கலும், போட்டியிட விருப்புபவர்களிடம் நேர்காணலும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 131 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 16ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று ராசா கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் தமிழகத்தில் 15 இடங்களில் போட்டியிட ஜனதா கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிடவுள்ளது.
இத்துடன் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான 12 வேட்பாளர்களின் பெயர்களையும் பாஜக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications