திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் என்று முடிவாகிவிட்ட நிலையில், தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக-காங்கிரஸ் இருதரப்புக்கும் பிரச்சனை நீடித்து வருகிறது.
காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சு நடத்தி வருகிறது. பல சுற்றுக்கள் பேசிவிட்ட நிலையிலும் பிரச்சனை தொடர்கிறது.
நேற்று திமுக எம்பி கனிமொழி, முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையிலும் கூட தொகுதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. ஆனாலும் அதில் சுமூகத் தீர்வு காணப்படவில்லை.
இந் நிலையில் இன்று காலை பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால், காங்கிரஸ் குழு இன்று காலை தங்கள் கட்சியின் சில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்தே கலைந்து சென்றுவிட்டனர். அறிவாலயத்துக்கு வரவில்லை
ஆனாலும் மாலையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கு தொகுதிகளை திமுக இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திமுக போட்டியிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக கேட்பதாலும், மேலும் பல தொகுதிகள் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவை போட்டியிட்ட தொகுதிகளாக இருப்பதாலும் பிரச்சனை தொடர்ந்து கொண்டுள்ளது.
மேலும் ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் கேட்டுள்ள சில தொகுதிகள் திமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
திமுக போட்டியிடும் தொகுதிகள் 121 ஆகக் குறைந்து விட்ட நிலையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க திமுக தயங்குகிறது. இதுவும் தொகுதி பங்கீடு தாமதத்திற்கு ஒரு காரணமாகும்.
குறிப்பாக திண்டுக்கல், ஆத்தூர், பல்லாவரம், மதுராந்தகம், அரவங்குறிச்சி, வேளச்சேரி, திருச்சி 2, திட்டக்குடி, வேதாரண்யம் ஆகிய 8 தொகுதிகளை பங்கீடு செய்வதில் தான் இழுபறி நீடித்து வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications