வயலார் ரவி மகளுக்கு சீட் தர கேரள இளைஞர் காங். எதிர்ப்பு
திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகளுக்கு டிக்கெட் தர கேரள இளைஞர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் காங் கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் உம்மன் சாண்டி முதல்வராவார் என்று கூறப்பட்டது, ஆனால் தற்போது இந்த பதவிக்கு கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் போட்டியிட தீர்மானித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவியும் முதல்வர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்று நேற்று முன்தினம் கொச்சியில் வயலார் ரவி கூறினார். ஆனால் தேர்தலில் தனது மகள் லட்சுமி போட்டியிட விரும்புவதாகவும் கூறினார்.
இந்நிலையில் லட்சுமிக்கு சீட் கொடுக்க கோட்டயம் மாவட்ட இளைஞர் காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோட்டயத்தில நேற்று நடந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் வயலார் ரவி மகளுக்கு தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என்றும் அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வயலார் ரவிக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications