அதிமுக கூட்டணியில் சிபிஎம்முக்கு 12, சிபிஐக்கு 10 சீட் ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் மதிமுக,சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு மட்டும் முடியாமல் இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் வருகிற 19ம் தேதிக்குள் 18 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கப் போவதாகசிபிஎம் அறிவி்ததது. இதனால் கூட்டணி உடையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் போர்க்கொடி உயர்த்திய சிபிஎம்மையும், சிபிஐயையும் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது அதிமுக. முதலில் சிபிஐ கட்சியினர் ஜெயலலிதா இல்லத்திற்கு வந்தனர். சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். தா.பாண்டியன் தவிர மூத்த தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது சிபிஐக்கான தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டது. அதன்படி சிபிஐக்கு 10 சீட்களை ஒதுக்கியது அதிமுக.
ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்தெந்த இடங்கள் என்பது நாளை மாலை அறிவிக்கப்படும் என்றார்.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இது தவிர ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டது. போட்டியிட்ட 10 இடங்களில் 6 இடங்களில் அந்தக் கட்சி வென்றது.
இம்முறை குறைந்தபட்சம் 15 இடங்களை சிபிஐ கோரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தரப்படும் அதே எண்ணிக்கையிலான இடங்களை தங்களுக்கும் தர வேண்டும் என்று கோரியது. ஆனால், 8 இடம் தான் தர முடியும் என்று ஆரம்பித்த அதிமுக 10 இடங்களைத் தந்துள்ளது.
சிபிஎம் கட்சிக்கு 12 சீட்-ஒரு இடம் குறைப்பு:
இந்திய கம்யூனிஸ்ட்டைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் அக்கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. அதன்படி அக்கட்சிக்கு 12 இடங்கள் தரப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தக் கட்சிக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 9 இடங்களில் வென்றது. இந் நிலையில் அதிமுகவிடம் இந்தக் கட்சி 18 இடங்களைக் கோரி வந்தது. ஆனால், 10 இடங்கள் தான் தர முடியும் என அதிமுக கூறியது. இந் நிலையில் இன்று 12 இடங்களைத் தந்து இந்தக் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார் ஜெயலலிதா. இதன்மூலம் கடந்த தேர்தலை விட ஒரு இடம் குறைவாக சிபிஎம் போட்டியிடுகிறது.
இடதுசாரிகளுக்கு மொத்தமே 22 சீட்!
இதன்மூலம் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 22 இடங்களை அதிமுக ஒதுக்கியுள்ளது.
அதிமுகவில் இதுவரை முடிந்துள்ள தொகுதிப் பங்கீடு விவரம்:
தேமுதிக-41
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-12
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-10
மனித நேய மக்கள் கட்சி -3
புதிய தமிழகம்-2
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி -2
பார்வர்ட் பிளாக்-1
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை-1
இந்திய குடியரசுக் கட்சி -1
சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்-1