'ராத்திரி 12.30 மணிக்கு..!'- ஒரு உட்டாலங்கடி எஸ்எம்எஸ்
இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு மறக்காமல் உங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள். இல்லாவிட்டால் காஸ்மிக் கதிர் வீச்சுத் தாக்குதலுக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்று கூறி ஒரு வதந்தி எஸ்எம்எஸ் உலகை வலம் வர ஆரம்பித்துள்ளது.
அந்த எஸ்.எம்.எஸ்.ஸில், இன்று இரவு 12.30 மணிக்கு செவ்வாய்க்கிரகத்திலிருந்து காஸ்மிக் கதிர்கள் வெளியேற ஆரம்பித்து நமது பூமி மண்டலத்திற்குள் நுழையவுள்ளது. எனவே அந்த சமயத்தி்ல உங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள். இதை பிபிசி மூலமாக நாசா சொல்லியுள்ளது. அலட்சியப்படுத்த வேண்டாம் என்று கூறுகிறது அந்த செய்தி.
ஆனால் இது மிகப் பெரிய டுபாக்கூர் செய்தி என்பது தெரிய வந்துள்ளது. சுனாமி தாக்குதலால் ஜப்பான் மட்டுமல்லாமல், உலகமே பெரும்அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. மேலும் 19ம் தேதி சூப்பர் மூன் நிகழ்வு நிகழவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பயன்படுத்தி சில குசும்புக்காரர்கள் இப்படி நாசா மூலமாக நாசமாப் போன இந்த வதந்தியை பரப்பி வருகின்றனர்.
இந்த செய்திக்குப் பதிலடியாக இன்னொரு எஸ்எம்எஸ்ஸும் வலம் வர ஆரம்பித்துள்ளது. அந்த மெஸேஜ் என்ன சொல்கிறது என்றால், நாசா சொல்லியுள்ளபடி நீங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் எல்லாம் செய்யத் தேவையில்லை. செவ்வாய்க் கிரகத்திலிருந்து வெளியாகப் போகும் காஸ்மிக் கதிரில் உள்ள ஆபத்தான ஸியான் டிரையான் (xeon-trion), பூமியைத் தொட்டவுடன், நாசாவின் பயோ ஹப்பிள் விண்வெளி கதிர் மாற்றியின் மூலமாக நைட்ரஸ் ஆக்சைடாக மாறி விடும்.
இந்த கதிர் மாற்றியை இமயமலைக்குள் ரகசியமாக புதைத்து வைத்துள்ளது நாசா. நைட்ரஸ் ஆக்சைடாக மாறுவதால், தாறுமாறாக செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படும், மேலும் அடக்க முடியாத அளவுக்கு சிரிப்பும் ஏற்படும். எனவே தயவு செய்து உங்களது வாயில் டேப் போடட்டு ஒட்டிக் கொள்ளுங்கள் அதேபோல செக்ஸை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் முயலுங்கள் என்று அந்த உட்டாலங்கடி எஸ்எம்எஸ் கூறுகிறது.












Click it and Unblock the Notifications