டெல்லியில் பள்ளி மாணவன் குத்திக் கொலை-8 சிறுவர்கள் கைது
டெல்லி: டெல்லியில் கடன் தகராறில் பத்தாம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்டான்.
டெல்லியைச் சேர்ந்தவர் யாஷ்(17). அங்குள்ள கேம்பிரிட்ஜ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் ஒரு சிறுவனுக்கு கடன் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சிறுவன் திருப்பிக் கொடுக்காமல் தகராறு செய்துள்ளான்.
இந்நிலையில் யாஷ் கடந்த சனிக்கிழமை அன்று தனது நண்பருடன் சேர்ந்து படிப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். அவர் தனது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருக்கையில் 8 முதல் 10 சிறுவர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். திடீர் என்று ஒருவன் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான். பிறகு அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
தனது நண்பர் அழைத்ததால் தான் யாஷ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர்கள் வீட்டில் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.