திமுக போக்கால் முஸ்லீம் லீக்கில் பிளவு-காயிதே மில்லத் பேரன் அதிமுகவுக்கு ஆதரவு
சென்னை: 3 தொகுதிகளைக் கொடுத்து பின்னர் அதிலும் ஒன்றை பிடுங்கிக் கொண்டதால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஒருபிரிவினர் காயிதே மில்லத் பேரனான தாவூத் மியா கான் தலைமையில் தனி அணியாகப் பிரிந்துள்ளனர். இவர்கள் அதிமுகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில்இடம் பெற்றுள்ள கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இதன் தலைவராக இருப்பவர் காதர் மொஹைதீன். இக்கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை முதலில் கொடுத்தது. மூன்றிலும் உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முரண்டு காரணமாக பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடமிருந்து தலா ஒருதொகுதியை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக.
இது முஸ்லீம் லீக் கட்சியினரிடையே பெரும் மன வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த பாத்திமா சயத் இதற்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்திருந்தார். மேலும் நெல்லை மாவட்ட முஸ்லீம் லீக், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், மறைந்த காயிதேமில்லத்தின் பேரனுமான தாவூத் மியாகான் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
இன்று காலை மியாகான் தலைமையில் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அக்கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் தாவூத் மியாகான் வெளியிட்ட அறிக்கையில்,
இஸ்லாமியர்கள் சம உரிமை பெறுவதற்காக காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கினார். இந்த இயக்கம் தோன்றி 63 ஆண்டுகள் ஆகி விட்டது.
ஆனால் பல்வேறு கட்சியினரிடமும் பலர் இந்த கட்சியை அடகு வைத்து விட்டனர். இதனால் முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குழப்பம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
3.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே இருந்ததை விட குறைவான பலன்களே கிடைக்கிறது. எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி. மு.க.வை ஆதரிக்க முடிவு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.