பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்!
இந்திய கல்வி துறையையே உலுக்கி வரும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம், தொடர்ந்து அரங்கேறி வரும் முறைகேடுகள் ஆகியவை நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை அடியோடு சிதைத்து வருகின்றன.
குறிப்பாக, நீட் (NEET) தேர்வு ரத்து விவகாரத்தாலும், தொடர் தேர்வு குளறுபடிகளாலும் அரசுப் பள்ளி மாணவர்கள், நடுத்தர குடும்பங்கள் வரை ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் கடும் சோகத்திலும், மன உளைச்சலிலும் தவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், இந்த விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாடு முழுவதும் இளைஞர்களைத் திரட்டி வரும் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP - Cockroach Janta Party) தனது அடுத்தகட்ட அதிரடிப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி
காக்ரோச் ஜனதா பார்ட்டியின் தலைமை செய்தித் தொடர்பாளரான (Chief Spokesperson) சௌரவ் தாஸ், சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வேகத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் ஜூன் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மாபெரும் போராட்டத்தில் அனைவரையும் கலந்துக்கொள்ள அழைத்தது மட்டும் அல்லாமல், பெங்களூரில் இருக்கும் தமிழ் மக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரைவரையும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரத்யேக வீடியோவும் வெளியிட்டு உள்ளார் சௌரவ் தாஸ்.
சௌரவ் தாஸ் வீடியோ
"என் இனிய தமிழ் மக்களுக்கு வணக்கம், நான் சௌரவ் தாஸ்" என்று தூய தமிழில் தனது வீடியோவை தொடங்கிய அவர், நீங்கள் எல்லாம் யோசிக்கலாம் இவன் எப்படி தமிழ் பேசுறான் என்று... எனது சொந்த ஊர் புதுச்சேரி என்பதால் நான் நல்லாவே தமிழ் பேசுவேன் என தெரிவித்து ,பெங்களூரில் நடக்கும் மாபெரும் போராட்டத்திற்கு பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சுற்றியுள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கட்சி சார்பற்ற போராட்டம்
இந்த அதிரடிப் போராட்டம் குறித்துப் பேசிய சௌரவ் தாஸ், இது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் அல்லது தனிப்பட்ட அமைப்பிற்கும் சாதகமான போராட்டம் அல்ல என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இது இந்திய மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 'தலைமுறைப் போராட்டம்' (Protest for a Generation) ஆகும்.
அரசுத் தேர்வுகளில் அடுத்தடுத்து முறைகேடுகள் நடந்த போதிலும், அதற்கு பொறுப்பேற்று மௌனம் சாதித்து வரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அடிப்படை நோக்கிலேயே இந்த போராட்டம் நடைபெறுகிறது என இந்த வீடியோவில் சௌரவ் தாஸ் விளக்கினார்.
தற்போதைய சூழலில், பெங்களூரு மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் வசித்து வரும் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் ஒருமித்த ஆதரவு இந்த போராட்டத்திற்கு அவசியம் என்றும் சௌரவ் தாஸ் விளக்கினார்.
டெல்லி போராட்டத்தை தொடர்ந்து தற்போது பெங்களூரில் நடக்கிறது. நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வு முறைகேடுகளால் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து தவிக்கும் சாமானிய நடுத்தரக் குடும்பத்து பெற்றோருக்கு இந்த 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் புதிய கல்விப் புரட்சிப் போராட்டம் ஒரு மாபெரும் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications