அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார். இவரது அமைச்சரவையில் கிருஷ்ணபைரே கவுடா அமைச்சராக பதவியேற்ற நிலையில் பெங்களூர் நகர வளர்ச்சி துறை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கிருஷ்ணபைரே கவுடா இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளார். அவர் முதல்வர் டிகே சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதனால் கிருஷ்ணபைரே கவுடா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார் கடந்த 3ம் தேதி பதவியேற்றார். அவருடன் ஒரு துணை முதல்வர், 12 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு இலாகாக்கள் கடந்த 4ம் தேதி இரவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பலரும் அதிருப்தியடைந்தனர். தங்களுக்கு கேட்ட இலாகா வழங்கவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக பெங்களூர் பிடிஎம் லே-அவுட் தொகுதியின் எம்எல்ஏவான ராமலிங்க ரெட்டி (8 வது முறை எம்எல்ஏ) டிகே சிவக்குமார் அமைச்சரவையில பெங்களூர் நகர வளர்ச்சி துறையை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த துறை கிடைக்கவில்லை. பெங்களூர் நகர வளர்ச்சி துறைக்கு பதில் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியான ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு டிகே சிவக்குமார் சமாதானம் செய்த நிலையில் ராஜினாமா முடிவை ராமலிங்க ரெட்டி திரும்ப பெற்றார்.
இருப்பினும் கூட இன்னும் டிகே சிவக்குமார் அமைச்சரவையில் பிரச்சனை தீரவில்லை. பெங்களூர் நகர வளர்ச்சி துறையில் தொடர்ந்து பூகம்பம் நீடித்து வருகிறது. இந்த துறை கிடைக்கவில்லை என்று அதிருப்தியான ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து அந்த துறையை பெற்றுள்ள அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தியில் உள்ளார்.
பெங்களூர் நகர வளர்ச்சி துறையில் 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம்' (GBA)', நம்ம மெட்ரோ (BMRCL) மற்றும் பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (BDA) மற்றும் பெங்களூரு மாநகர பகுதிக்கான வளர்ச்சி ஆணையம் (BMRDA) ஆகியவற்றை டிகே சிவக்குமார் வைத்துள்ளார்.
இதற்கு முன்பு பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சராக டிகே சிவக்குமார். அப்போது பெங்களூரு வளர்ச்சி ஆணையம் மற்றும் பெங்களூரு மாநகர பகுதி வளர்ச்சி ஆணையம் பெங்களூர் நகர வளர்ச்சி துறையிடம் இருந்தது. ஆனால் தற்போது டிகே சிவக்குமார் அதனை பெங்களூர் நகர வளர்ச்சி துறைக்குள் கொண்டு வராமல் தனியாக தானே வைத்துள்ளார். பெங்களூர் நகர வளர்ச்சியில் இந்த 2 ஆணையங்களும் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் அதனை டிகே சிவக்குமார் தன்வசம் வைத்துள்ளார்.
இதனால் கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தியில் உள்ளார். தனது இலாகாவின் முக்கியத்துவத்தை டிகே சிவக்குமார் குறைத்துள்ளதோடு, பெங்களூர் நகர வளர்ச்சிக்கான முக்கிய ஆணையங்களை தன்வசம் வைத்துள்ளதாக கிருஷ்ணபைரே கவுடா நினைக்கிறார். இதுபற்றி அவர் காங்கிரஸ் மேலிடத்திடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில் தான் கிருஷ்ணபைரே கவுடா, முதல்வர் டிகே சிவக்குமாரிடம் விளக்கம் கோரியுள்ளார்.
இதுபற்றி கிருஷ்ணபைரே கவுடா கூறுகையில், ''எனக்கு ஒரு பொறுப்பு வழங்கப்படும்போது, எனது பணி என்ன என்பதில் தெளிவு இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். முதலமைச்சர் இது குறித்து முடிவெடுப்பதாகக் கூறியுள்ளார். எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. பெங்களூரு வளர்ச்சியை கவனிக்கும் கடினமான பொறுப்பை கட்சி என்னிடம் வழங்கியுள்ளது. இது ஒரு கடினமான வேலை. இதை நான் அதிகாரப் போட்டியாக பார்க்கவில்லை.
ஒரு பொறுப்பை ஏற்கும் போது தெளிவு இருக்க வேண்டும், ஏனென்றால் நான் எந்தப் பொறுப்பை ஏற்றாலும், அதற்கு நான் பதிலளிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தெளிவு இருந்தால் மட்டுமே எங்களால் சரியான முடிவுகளை வழங்க முடியும்'' என்றார். அதிருப்தி இல்லை என பத்திரிகையாளர்களிடம் கிருஷ்ணபைரே கவுடா கூறினாலும் கூட பிடிஏ மற்றும் பிஎம்ஆர்டிஏ ஆகியவற்றை தன்னிடம் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணபைரே கவுடா நினைக்கிறார்.
மேலும் இலாகா ஒதுக்கீடு செய்து 9 நாட்கள் ஆகும் நிலையில் கிருஷ்ணபைரே கவுடா அமைச்சர் பதவியை ஏற்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறார். இதனால் டிகே சிவக்குமார் பிடிஏ மற்றும் பிஎம்ஆர்டிஏ உள்ளிட்ட ஆணையங்களை பெங்களூர் நகர வளர்ச்சி துறையின் கீழ் தராவிட்டால் கிருஷ்ணபைரே கவுடா ராஜினாமா செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications