முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் 3 இடங்கள்-'தியாகத்திற்குக்' கிடைத்த பரிசு!
சென்னை: காங்கிரஸ் கட்சிக்காக தனது ஒரு இடத்தை விட்டுத் தந்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தியாகத்தைப் பாராட்டும் வகையில், அந்தக் கட்சிக்கு மீண்டும் மூன்று இடங்களைக் கொடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
காதர் மொஹைதீன் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆரம்பத்தில் திமுகவில் 3 சீட்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி செய்து வந்த பெரும் குழப்பத்தைத் தொடர்ந்து, பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களிலிருந்து தலா ஒரு இடத்தை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. அதற்காக காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் ஒரு நன்றி கூட கூறவில்லை இந்த இரு கட்சிகளுக்கும்.
இந்த நிலையில் நேற்று தொகுதிள் விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் 3 இடங்களை ஒதுக்கி திமுக அறிவித்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், காதர் மொஹைதீனும் கையெழுத்திட்டனர்.
முஸ்லீம் லீக் கட்சிக்கு பெருமை வாய்ந்த சென்னை துறைமுகம் தொகுதியை திமுக கொடுத்துள்ளது. இந்தத் தொகுதி முதல்வர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லீம் லீக் கட்சிக்கான தொகுதிகள்:
- துறைமுகம்
- வாணியம்பாடி
- நாகப்பட்டனம்