ஜப்பான் அணு நெருக்கடி: பணியாளர்களைத் திரும்ப அழைக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்!
பெங்களூர்: ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு நெருக்கடி காரணமாக, அங்கு பணியில் உள்ள தனது ஊழியர்களை திரும்ப அழைத்துள்ளன டிசிஎஸ், இன்போஸிஸ், மைன்ட் ட்ரீ மற்றும் எச்சிஎல் நிறுவனங்கள்.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோ வரை கதிர்வீச்சு வேகமாகப் பரவி வருகிறது. அணுஉலையின் கழிவுத் துகள்களும் கதிரியக்கப் பொருள்களும் ஃபுகுஷிமோ டாய்ச்சி நிலையத்திலிருந்து 300 கிமீ தூரத்துக்குப் பரவியுள்ளது.
இவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் ஜப்பானிய அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், வெளிநாட்டவர்கள் ஜப்பானை விட்டு வெளியேறி வருகின்றனர். அங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்துக் கொள்வதில் மும்முரமாக உள்ளன.
இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், ஜப்பானில் உள்ள தனது 200 பணியாளர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. இவர்களை வேறு நாடுகளில் பணியமர்த்தும் வேலை நடக்கிறது.
இன்போஸிஸ் நிறுவனத்தின் 500 பணியாளர்கள் ஜப்பானில் உள்ளனர். இவர்களில் 367 பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாக இந்தியாவுக்கு வருமாறும், நிலைமை சரியான பிறகு திரும்பப் போகலாம் என்றும் இன்போஸிஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. இவர்களில் ஏற்கெனவே சிலர் வேறு நாடுகளுக்குப் போகவும் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
காக்னிஸன்ட் நிறுவனம், ஜப்பானில் உள்ள தனது பணியாளர்களுக்கு சீனா மற்றும் இந்தியாவில் பணிமாறுதல் வாய்ப்பை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
மைன்ட் ட்ரீ நிறுவனத்தின் சார்பில் ஜப்பானில் உள்ள 20 பணியாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் விரும்பினால் பணியிட மாறுதல் தரவும் இந்நிறுவனம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
எச்சிஎல் நிறுவனம், நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், யாரெல்லாம் ஜப்பானிலிருப்பது பாதுகாப்பற்றது என கருதுகிறார்களோ அவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என அறிவித்துள்ளது. ஆனால் ஜப்பானில் எந்த அணுக்கதிர் வீச்சு ஆபத்தும் இல்லை என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இந்நிறுவனத்தின் சிஇஓ வினீத் நாயர் கூறியுள்ளார். எச்சிஎல்லுக்கு 400 பணியாளர்கள் ஜப்பானில் உள்ளனர். இவர்களில் 200 பேர் இந்தியர்கள்.












Click it and Unblock the Notifications