இல்லாத தொகுதிகளிலும் கூட போட்டியிடும் கார்த்திக் கட்சி!
சென்னை: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி 40 இடங்களில் தனித்து போட்டியிடும் என்று கூறி அதன் பட்டியலையும் வெளிட்டார் அக் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக்.
ஆனால், அவர் அறிவித்த அந்த பட்டியலில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றிருந்தன. இதன்மூலம் இல்லாத தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
நேற்று நிருபர்களிடம் பேசிய கார்த்திக், நாங்..க.. இப்..போ.. அதிமுக கூட்டணியில இல்ல. அது பத்தி... அதிமுக குழுவுக்...கூ... கடிதம் எழுதிட்டோ....ம்.. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா..மேடம் அவுங்களுக்கும் 4 பக்கம், 4 பேஜஸ்ல கடிதத்தையும் அனுப்பிட்டோம்.
எதனால வெளியே.... வந்தோம்? என்பதை திரும்ப நினைத்து பார்க்க விரும்பலை. தன்மானத்தை இழந்து எங்கேயும் இருக்க முடியாது.
எங்களை ஏமாற்றினால் பரவாயில்ல. மக்களை அவர்கள் ஏமாற்றா....மல் இருந்தால் சரி. மக்களும் ஏமா...றமல் இருக்கனும்.. அதா....ன் என் ஆச.
மதிமுக பொதுச் செயலாளர் வை...கோ... மேல நான் ரொம்....ப மரியாதை வச்சுருக்கே...ன். அதிமுகவுல அவருக்கே இந்த நிலைமை. அவர் அந்த கூட்டணியில் இருந்து விலகி வந்து தனி அணி அமைத்தால் நீங்கள் சேர்வீர்களா என்று கேட்கிறீர்கள். அவர் அழைத்தால் நாங்கள் பரிசீ...லனை செய்வோம். ஆனா...ல் கூட்டணி என்றா...லே எங்களுக்கு இப்போது அலர்ஜியா இருக்கு என்று இழு இழு என்று இழுத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதை, நாம் இழுக்காமல் எழுதினால் கீழே உள்ளவாறு இருக்கும். அதன் விவரம்:
நாங்கள் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறோம். அம்பாசமுத்திரம், சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நான் போட்டியிடுவேன். வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து நான் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். எங்க கட்சி போட்டியும் தொகுதிகள் விவரம் இது தான்.
1. சங்கரன்கோவில். 2. வாசுதேவநல்லூர். 3. கடையநல்லூர். 4. தென்காசி. 5. ஆலங்குளம். 6. திருநெல்வேலி. 7. பாளையங்கோட்டை. 8. அம்பாசமுத்திரம். 9. நான்குநேரி. 10. ராதாபுரம். 11. ராமநாதபுரம். 12. முதுகுளத்தூர். 13. அருப்புக்கோட்டை. 14. சாத்தூர். 15. விருதுநகர். 16. சிவகாசி. 17. ஸ்ரீவில்லிபுத்தூர். 18. ராஜபாளையம். 19. விளாத்திக்குளம். 20. ஒட்டாபிடாரம்.
21. கோவில்பட்டி. 22. தேனி. 23. போடிநாயக்கனூர். 24. கம்பம். 25. பல்லாடம். 26. திருப்பூர் வடக்கு. 27. திருப்பூர் தெற்கு. 28. திருமங்கலம். 30. உசிலம்பட்டி. 31. திருப்பரங்குன்றம். 32. மைலாப்பூர். 33. தியாகராயநகர். 34. அண்ணாநகர். 35. திருவாடனை என்று முடித்தார் கார்த்திக்.
தமிழ்நாட்டிலேயே இல்லாத தொகுதிகள்:
கார்த்திக் அறிவித்த தொகுதிகளில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றிருந்தன என்பது தான் இதில் விஷேசம். இவரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டணியை விட்டு நீக்காமல் இருந்திருந்தால் தான் தப்பு!.
இந் நிலையில் இன்று சென்னையில் 3 இடங்களில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களை கார்த்திக் அறிவித்துள்ளார்!. வண்டில என்ஜின் இருக்கா.. ஸாரி, இது பட்டியல்ல இருக்கா!
அள்ளிக் கொடுத்த கருணாநிதி-அவமானப்படுத்திய ஜெயலலிதா:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய கார்த்திக், கூட்டணி கட்சிகளை ஜெயலலிதா அவமரியாதை செய்துள்ளார். வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு தொகுதிகள் ஒதுக்கும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது, அவரின் அகம்பாவத்தைக் காட்டுகிறது.
வைகோ மூத்த அரசியல்வாதி. நான் மதிக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர். அவர் பேச்சை ரசித்து இருக்கிறேன். அதிமுகவுக்கு பக்க பலமாக நீண்ட காலம் இருந்துள்ளார். இதற்காக அவர் பட்ட அவமானங்கள், சந்தித்த விமர்சனங்கள் கொஞ்சமல்ல. அப்படிப்பட்டவரையே தூக்கி எறிந்தது என்னை மட்டுமின்றி, தமிழக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விஜயகாந்த்தும் நல்ல பலத்தோடு இருக்கிறார். அவர் கட்சிக்கும் கேட்ட தொகுதிகளை ஒதுக்கவில்லை. இந்த நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுத்த முதல்வர் கருணாநிதியின் தாராள மனப்பான்மை நினைவுக்கு வருகிறது.
கூட்டணி தலைவர்களை இப்போதே இந்த பாடுபடுத்தும் ஜெயலலிதா, நாளை ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார். கூட்டணி தலைவர்களை கேட்டில் நிறுத்துவாரோ, ஜெயிலில் நிறுத்துவாரோ... தெரியவில்லை.
கட்சிகளின் தலைவர்களுக்கே இப்படி என்றால் ஓட்டு போட்ட மக்கள் எவ்வளவு தூரத்தில் இருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடாளும் மக்கள் கட்சிக்கு தொகுதிகள் எதிர்பார்த்து காத்திருந்தோம். எங்களை காயப்படுத்தினார்கள். என்னையோ, எங்கள் கட்சியையோ, மக்களையோ மதிக்காவிட்டாலும் பரவாயில்லை.
பசும்பொன் தேவர் உருவம் பொறித்த எங்கள் கொடிக்கு மரியாதை கொடுங்கள் என்றோம். முகத்தை திருப்பிக் கொண்டார்கள். தன்னம்பிக்கை இருக்கலாம். ஆணவம் இருக்க கூடாது. எல்லோரையும் மதிக்கும் பண்பு இல்லாமல் தலைவராக எப்படி இருக்க முடியும். கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications