ஜப்பானுக்குப் போக வேண்டாம்! - இந்தியா அறிவுரை

சுனாமி பாதித்துள்ள ஜப்பானில் அணு உலைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த அணு உலைகள் வெடிப்பால் மூடப்பட்ட ஃபுகுஷிமா அணு நிலையத்தில் இப்போது தானாகவே வெண்புகை வெளியேற ஆரம்பித்துள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜப்பானில் உள்ள இந்தியர்கள் ஜப்பான் அதிகாரிகளின் யோசனைக்கேற்ப, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்தியர்கள், ஜப்பானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
ஜப்பான் அதிகாரிகளுடனும், அங்குள்ள இந்தியர்களுடனும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது.
மேலும், ஜப்பானில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக, கூடுதல் இருக்கைகளுடன் தினசரி விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஜப்பானிலிருந்து வரும் அனைவரையும் கதிரியக்க சோதனைக்குட்படுத்திய பிறகே இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, மும்பை, டெல்லி விமான நிலையங்களில் அணுக்கதிர் வீச்சு சோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுரை கூறியுள்ளது. மேலும், வெடிப்பு ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலைக்கு 50 மைல் சுற்றளவில் அமெரிக்கர்கள் யாரும் வசிக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக வெளியேற முடியாதபட்சத்தில், வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுரை கூறியுள்ளது.
ஜப்பான் தூதரகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்!
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். அவருடன் வெளியுறவுத் துறை இணை செயலாளர் கவுதம் உள்ளிட்ட வெளியுறவு துறை அதிகாரிகளும் சென்றனர்.
அவர்களை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் (பொறுப்பு) அகிதகா சைகி வரவேற்றார். அவரிடம் ஜப்பான் மக்களுக்கு ஆழ்ந்த கவலையை பிரதமர் தெரிவித்தார். மேலும், தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில், 'ஜப்பான் மக்களின் வேதனையிலும் துயரத்திலும் இந்திய மக்கள் பங்கெடுத்துக் கொள்கின்றனர்' என பிரதமர் மன்மோகன் சிங் எழுதினார்.












Click it and Unblock the Notifications