இன்று தொடங்க இருந்த ஜெயலலிதாவின் பிரசார பயணம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் கூட்டணிக் கட்சிகளால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தொடர்ந்து தனது பிரசாரத்தை இன்று தொடங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளார் ஜெயலலிதா.
160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த ஜெயலலிதா இன்று மதுரையிலிருந்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார். ஏப்ரல் 10ம் தேதி வரை பிரசாரம் நீளும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் எங்குமே கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் திட்டமும் இடம் பெறவில்லை.
ஜெயலலிதாவின் போக்கால் கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியம், அதிர்ச்சியும், அவமானமும் அடைந்தன. இதையடுத்து நேற்று அத்தனை பேரும் ஒன்று திரண்டு ஆலோசனைகளில் குதித்தனர். இருந்தாலும் அதிமுக தரப்பு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அதிமுக தரப்பிலிருந்து அதிருப்தியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பிரசாரமும் தள்ளி வைக்கப்பட்டது.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையாததால், 18ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.