தமிழகத்தில் சிரஞ்சீவியைப் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங். திட்டம்!
விஜயகாந்த் ஸ்டைலில் தனிக் கட்சி ஆரம்பித்து அது போணியாகாமல் போனதால் கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார். இந்த இணைப்பு விழா அடுத்த மாதம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சிரஞ்சீவியை தமிழக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாம். தெலுங்கில் மெகா ஸ்டார் ஆவதற்கு முன்பு தமிழிலும் நடித்து வந்தார் சிரஞ்சீவி. தமிழகத்திலும் அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சிரஞ்சீவிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இந்த மாவட்டங்கள் தவிர தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள சென்னையிலும் சிரஞ்சீவியைப் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
சிரஞ்சீவி டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது தமிழக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு சிரஞ்சீவிக்கு சோனியாவே நேரடியாக அழைப்பு விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.