விஜயகாந்த்தின் கடும் பிடிவாதத்தால் ஸ்தம்பித்துப் போன அதிமுக கூட்டணி

திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முட்டல் பின்னர் ஏற்பட்ட சமாதானம், அமைதி ஆகியவற்றை அதிமுகவினர் உதாரணமாக காட்டுகின்றனர்.
காங்கிரஸாரும் ஆரம்பத்தில் கடுமையான கெடுபிடிகளைத்தான் செய்தார்கள். ஆனால் திமுக எடுத்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெகுவாக இறங்கி வந்தது. ஓரளவு சமரசம் செய்து கொண்டு திமுகவிடமிருந்து தொகுதிகளையும் பெற்றுக் கொண்டு தற்போது கூட்டணியில் பிரச்சினையில்லாமல் போய் விட்டது.
ஆனால் அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் காட்டி வரும் கடுமையான பிடிவாதம் காரணமாக கூட்டணியின் எதிர்காலமே பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.
விஜயகாந்த் ஒருபோதும் அதிமுகவுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார் என்ற தங்களது கருத்து தற்போது உண்மையாகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
திமுகவை விட மிகப் பெரிய கூட்டணியாக உருவெடுத்தது அதிமுக. பல முக்கியக் கட்சிகளும் இடம் பெற்றன. இருந்தாலும் தேமுதிகவுக்கு மிகவும் மரியாதை கொடுத்தார் ஜெயலலிதா, அதிக அளவாக 41 தொகுதிகளையும் உடனடியாக ஒதுக்கிக் கொடுத்தார். இன்ன பிற சலுகைகளையும் காட்டினார்.
இதற்காக மதிமுகவைக் கூட அவர் உதாசீனப்படுத்தினார்,ஓரம் கட்டினார். இதனால் வெறுத்துப் போன மதிமுக கூட்டணியை விட்டே வெளியேறி விட்டது.
மதிமுகவின் இழப்பு மிகப் பெரிதாக இருந்தாலும் கூட இன்னும் தேமுதி்கவை ஜெயலலிதா கைவிடவில்லை. தொடர்ந்து அவர்களுடன் பேசியபடிதான் உள்ளார். ஆனால் தாங்கள் கேட்கிற தொகுதிகளை கொடுத்தே தீர வேண்டும் என்று விஜயகாந்த் கட்சி முரண்டு பிடிப்பது நியாயமே இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
கொடுத்தது போதாது என்று மேலும் நான்கு தொகுதிகள் கூடுதலாக தேவை என்று அது மிரட்டிவருவதும் அதிமுகவினரை கோபமடைய வைத்துள்ளது.
பெரிய கூட்டணி என்பதால் சில நீக்குப் போக்கான நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் மட்டுமே அனைத்துக் கட்சிகளையும் சமரசப்படுத்த முடியும். அதை செய்ய விஜயகாந்த் முன்வராமல் தன் வரை மட்டுமே அவர் கவலைப்படுவதாகவும் அதிமுகவினர் குமுறுகின்றனர்.
மிகப் பெரிய அளவில் உருவான அதிமுக அணி இன்று ஸ்தம்பித்து சீர்குலைந்து போய் நிற்பதற்கு விஜயகாந்த்தும், அவரது பிடிவாதமுமே காரணம் என்பது அதிமுகவினரின் கருத்து.












Click it and Unblock the Notifications