திமுக கதாநாயகி வெறும் கனவு: மார்க்சிஸ்ட்
திருப்பூர்: திமுக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் என்ற பெயரில் வெறும் கனவுத் திட்டங்கள் தான் உள்ளன என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தெரிவித்தார்.
இது குறித்து அவர் நேற்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் பணியை இடதுசாரிகள் ஏற்கனவே துவங்கியுள்ளனர். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் தற்போது தேர்தல் ஆணையம் தீவரமாக செயல்படுவது பாராட்டுக்குரியது என்றாலும் அது போதுமானதாக இல்லை.
தேர்தல் நேரத்தில் வாக்களார்களுக்கு கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பல மாவட்டங்களில் உள்ள ஆளும் கட்சிக்கு நெருக்கமான பெருமுதலாளிகள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் கொடு்தது பதுக்கி வைத்துள்ளனர். அந்த பதுக்கல் பணம் எல்லாம் தேர்தல் சமயத்தில் திருமங்கலத்தில் நடந்தது போல மக்களிடம் கொடுக்கப்படும். அதை தேர்தல் ஆணையம் தான் தடுக்க வேண்டும்.
ஆளும்கட்சிக்கு ஆதரவான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் என்ற பெயரில் வெறும் கனவுத் திட்டங்கள் தான் உள்ளன. இது தமிழகத்தில் வேலையின்மை, வறுமை அதிகரித்திருப்பதையே உறுதிப்படுத்துகிறது. இது தவிர அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஏற்பாடு, வருவாய் குறித்து தெரிவிக்காமல் மக்களை ஏமாற்றும் வகையிலேயே தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
திருப்பூர் சாயக்கழிவுநீர் பிரச்சனையை தீர்க்க ரூ.700 கோடி செலவில் குழாய் வழியே கழிவுகளைக் கடலுக்குக் கொண்டு செல்லும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். அத்திட்டத்தை நிறைவேற்ற ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை என்பது திமுகவின் முரண்பாடான நிலைக்கு சிறந்த உதாரணம் ஆகும்.
அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறிவிட்டது. மதிமுக தலைவர் வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்து மீண்டும் அதிமுக கூட்டணியி்ல் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்த விவகாரம் குறித்தும் வெளியாகும் விமர்சனங்களில் உண்மையில்லை என்றார்.