234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்-ஸ்டாலின்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வந்த மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தொகுதி மாறி, கொளத்தூரில் நிற்கிறார். இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும்.
திமுக வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் தனது தொகுதிக்குச் சென்று திமுகவினர் மத்தியில் பேசி உற்சாகமாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜரத்தினத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியின் வெற்றி சிறப்பாக உள்ளது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications