தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை! - தேர்தல் ஆணையம்
சென்னை: பேரவைத் தேர்தலை ஒட்டிய, அனைத்துவிதமான கருத்துக் கணிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 முதல் மே 10 வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 10 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதி காலை 8 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.
அசாம் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் கடைசி கட்டத் தேர்தல் மே 10-ம் தேதியும் நடக்கிறது. இந்த தினங்களுக்குள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது. தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பு தொடர்பான எந்த நிகழ்ச்சிகளையும் வாக்குப் பதிவு முடிவடையும் முன் 48 மணி நேரத்துக்கு ஒளிபரப்பு செய்யக் கூடாது.
கருத்துக் கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்கள், முகமைகள் (ஏஜென்சிகள்) குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். கருத்துக் கணிப்புகள் எவ்வாறு தயார் செய்யப்பட்டன; எந்த வகைகளில் மேற்கொள்ளப்பட்டன என்பன போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மின்னணு ஊடகங்கள் என்பன தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது, இணையதளம், வானொலி, உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி உள்ளிட்டவை அடங்கும்.
-இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications